Thursday 4 August 2016

அதிகாலை..!

அதிகாலையில் எழும்புவது கடினமாக உள்ளதா?
அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம். உலகில் பல மாற்றங்களை அல்லாஹ் அதிகாலை நேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதி காலைத் தொழுகையை நிறைவேற்றுபவர்களை இஸ்லாம் வாழ்த்துகின்றது. வெறுமனே மீசையும், தாடியும் வைத்திருப்பவர்கள் அல்லர் ஆண்கள், மாறாக அதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்களே உண்மையான ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப்பெயர் சூட்டுகின்றது.

நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் இவ்வாறு துஆ கேட்டார்கள். யா அல்லாஹ்! எனது சமூகத்திற்கு அதிகாலை நேரத்தில் அருள்வளத்தை நல்குவாயாக! (அபூதாவூத்)

முஹமத் நபி(ஸல்) அவர்களின் இந்தப் பிரார்த்தனைக்கு எந்தவிதத் தகுதியும் இல்லாமல் அதிகாலை நேரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் சமூகமாகவே நம் சமூகம் இருக்கின்றது.

ஃபாத்திமா(ரழி) அறிவிக்கின்றார். அதிகாலை நேரத்தில் நான் படுக்கையில் புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். அந்நேரம் நபி(ஸல்) என்னருகே வந்து தங்களது பாதங்களால் என்னை உசுப்பிவிட்டு இவ்வாறு கூறினார்கள்.

அருமை மகளே! எழு! அல்லாஹ்வின் வாழ்வாதாரங்கள் வழங்கப்படும் நேரத்திற்கு சாட்சியாளராக இரு. அலட்சியப்படுத்துபவராக மாறி விடாதே. அதிகாலை நேரத்திற்கும் சூரிய உதயத்திற்கும் இடையே இறைவன் (ரிஸ்க் எனும்) வாழ்வாதாரத்தை வழங்குகிறான். (பைஹகீ)

ஏனெனில், உழைப்பாளர்களும், சோம்பேறிகளும் இந்த நேரத்தில்தான் பிரித்து அறியப் படுகின்றார்கள்.

அதிகாலைத் தொழுகைக்குச் செல்லும் ஒருவரைப் பார்த்து இறைவன் வியக்கும் காட்சியை நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு விவரிக்கின்றார்கள்.

படுக்கை, போர்வை, மனைவி, மக்களின் அரவணைப்பு அத்தனையையும் உதறிவிட்டு அதிகாலையில் எழும் மனிதனைப் பார்த்து இறைவன் வியப்படைகின்றான். வானவர்களிடம் கேட்கின்றான். வானவர்களே! எனது இந்த அடியானைப் பாருங்கள்.

படுக்கை, போர்வை, மனைவி, மக்கள் அத்தனையையும் உதறிவிட்டு அதிகாலையில் எழுந்து விட்டான். எதற்காக..? என்ன வேண்டும் இந்த அடியானுக்கு? எனது அருள்மீது ஆசை வைத்தா? எனது தண்டனையைப் பயந்தா? பின்னர் வானவர்களிடம் அல்லாஹ்வே கூறுகின்றான். உங்களை சாட்சி வைத்துக் கூறுகின்றேன். அவன் ஆசைப்பட்டதை நான் அவனுக்கு நிச்சயம் கொடுப்பேன். அவன் எதைப் பயப்படுகின்றானோ அதிலிருந்து நிச்சயம் அவனுக்கு நான் பாதுகாப்புக் கொடுப்பேன். (அஹ்மத்)

நபிகளாரின் வேதனை :
உபை இப்னு கஅப்(ரழி) அறிவிக்கின்றார். ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் ஸுபுஹ் தொழுகை முடித்தபின் எங்களை நோக்கித் திரும்பியவாறு கேட்டார்கள். இன்ன மனிதர் தொழுகைக்கு வந்தாரா? மக்கள், இல்லை என்று கூறினர். மீண்டும், இன்னவர் வந்தாரா? என்று கேட்க, மக்களும் இல்லை என்று கூற, நபி(ஸல்) அவர்கள் வேதனையுடன் இவ்வாறு கூறினார்கள்.

நயவஞ்சகர்களுக்கு இந்த இரு தொழுகைகளும் (ஸுபுஹ், இஷா) கடினமானவையாக இருக்கும். இந்த இரு தொழுகைகளில் கிடைக்கும் நன்மைகளை இவர்கள் அறிந்து கொண்டால் தவழ்ந்தேனும் இதற்காக வருவார்கள்.
(புகாரி, முஸ்லிம்)

இறையச்சம் என்றால் என்ன?

அல்-ஜுபைல் தஃவா நிலையம்
ஜுபைல்-2 சிறப்பு பயான் நிகழ்ச்சி
இடம்: SKS கேம்ப் பள்ளி வளாகம்
(அபூ ஹதிரிய்யா பிரதான சாலை)
நாள்: 17-07-2016
தலைப்பு: இறையச்சம் என்றால் என்ன?
வழங்குபவர்: அஷ்ஷைக்: ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி
அழைப்பாளர், தமிழ்நாடு – இந்தியா

Saturday 30 April 2016

வரலாறு படைத்த மிஃராஜ்

அல்லாஹ் ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி பாரிய மாற்றத்தை கொண்டுவருகிறான்.
உலகிற்கு வந்த எல்லா தூதர்களின் வாழ்க்கையிலும் முஃஜிஸாத்துகள் (அற்புதங்கள்) என்ற பெயரில் பலவிதமான அற்புதங்களை நிகழ்த்திக் காட்டி மக்களுக்கு மத்தியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தினான்.
அந்த வரிசையில் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் ஹிஜ்ரத்திற்குப்
பின் மிஃராஜ் எனும் விண்வெளி பயணத்தை ஏற்ப்படுத்தினான்.
இந்த பயணம் நபியவர்களுக்கு பாரிய திருப்பு முனையாக அமைந்தது.
மக்களுக்கு மத்தியில் வரலாறு படைத்தது.
மிஃரஜூம் அதன் நோக்கமும்
மிஃராஜின் நோக்கத்தை அல்லாஹ் குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான். ‘தனது அடியாரை மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, மஸ்ஜிதுல் அக்ஸா வரை பயணம் செய்வித்த அல்லாஹ் தூய்மையானவன். அது எத்தகைய இடம் என்றால், அதனை சூழாக பரகத்தை ஏற்படுத்தியுள்ளோம். மேலும் நமது அத்தாட்சிகளை காட்டுவதற்காக (அவரை அழைத்துச் சென்றோம்) அல்லாஹ் செவியேற்கக் கூடியவனாகவும், பார்க்க கூடியவனாகவும் இருக்கிறான். (17- 01)
இந்த வசனத்தின் மூலம் தனது அத்தாட்சிகளை நபியவர்களுக்கு காட்டுவதற்காக அழைத்து செல்லப் பட்டதாக அல்லாஹ் கூறுகிறான். மேலும் அல்லாஹ்வின் வல்லமையையும் உலகிற்கு காட்டுவதற்காகவும் இந்த விண்வெளிப் பயணத்தை நிகழ்த்தி காட்டியுள்ளான்.
ஓவ்வொரு நபிமார்களுக்கும் ஒவ்வொரு விதமான அற்புதங்களை அல்லாஹ் வழங்கினான். நபியவர்களுக்கு வழங்கிய இந்த அற்புதம் வித்தியாசமான முறையில், உலகமே வியக்க கூடிய அளவிற்கு அல்லாஹ் நிகழ்த்திக் காட்டினான்.
நபி (ஸல்) அவர்கள் கஃபாவுக்கு அருகாமையில் பாதி வழிப்பிலும் பாதி தூக்கத்திலும் இருந்த சந்தர்ப்பத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஏனைய இரண்டு மலக்குமார்களுடன் வந்து நபி (ஸல்) அவர்களை ஸம்ஸம் நீரூற்றுக்கு அருகாமையில் அழைத்து சென்று அவரது நெஞ்சை பிழந்து இதயத்தை வெளியில் எடுத்து ஸம்ஸம் நீரால் கழுவி ஈமான் என்ற நம்பிக்கையாலும், அறிவு என்ற நுண்ணறிவாலும் நிரப்பி, மீண்டும் நெஞ்சில் வைத்து தடவினார்கள். நபி (ஸல்) அவர்கள் சிறு வயதாக இருக்கும் பொழுதும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது.
நபி (ஸல்) அவர்கள் பைத்துல் ஹராமில் (கஃபாவில்) இருந்து பைத்துல் அக்ஸாவுக்கு ஜிப்ரீல் (அலை) மூலம் அழைத்து செல்லப்பட்டார்கள்.
புராக்
புராக் என்ற வாகனம் கோவேறு கழுதையை விட சிறியதும், கழுதையைவிட பெரியதும், அது வெள்ளை நிறமானது. அந்த புராக் வாகனம் தன் பார்வை எட்டும் அளவிற்கு அடி எடுத்து வைத்து வேகமாக செல்லக் கூடியது.
பைத்துல் முகத்திஸ்
நபி (ஸல்) அவர்கள் கஃபாவில் இருந்து பைத்துல் முகத்திஸூக்கு செல்லும் வழியில் செம்மண் குன்றுக்கு அருகில் மூஸா (அலை) அவர்களின் மண்ணரையில் மூஸா நபியை தொழுத வண்ணமாக கண்டார்கள். இது நபியவர்களுக்கு காட்டிய அல்லாஹ்வின் அத்தாட்சியாகும்.
நபி (ஸல்) அவர்கள் பைத்துல் முகத்தஸிற்கு சென்ற உடன் நபிமார்கள் தனது வாகனங்களை கட்டிவைக்கும் இடத்தில் புராக் வாகனம் கட்டிவைக்கப்பட்டது. அங்கு மீண்டும் மூஸா நபியை அல்லாஹ் எடுத்துக் காட்டினான் மூஸா நபி ஷனூஆ குலத்தை சார்ந்த உயரமான மனிதரின் தோற்றத்தில் காணப்பட்டார்கள். அதே போன்று ஈஸா (அலை) அவர்களையம் அல்லாஹ் எடுத்துக் காட்டினான். ஈஸா (அலை) அவர்கள் உர்வா பின் மஸ்ஊத் அஸ்ஸகபி அவர்களைப் போன்ற தோற்றத்தில் காணப்பட்டார்கள். அதே போன்று இப்றாஹீம் (அலை) அவர்களை அல்லாஹ் எடுத்துக் காட்டினான் அவர்கள் நபி அவர்களுடைய சாயலில் காணப்பட்டார்கள். அந்த இடத்தில் எல்லா நபிமார்களுக்கும் தலைமை தாங்கி நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடாத்தினார்கள். தொழுகை முடிந்வுடன் இவர்தான் நரகத்தின் காவலாளி என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் மாலிக் (அலை) அவர்களை அறிமுகப்படுத்தி ஸலாம் சொல்லும்படி சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் ஸலாம் சொல்ல ஆரம்பிக்கும் போது மாலிக் (அலை) அவர்கள் முந்திக்கொண்டு நபி அவர்களுக்கு ஸலாம் கூறினார்.
அதன் பின் ஜிப்ரீல் (அலை) அவர்களுடன் புராக் வாகனத்தில் ஏறி விண்னை நோக்கி பயணமானர்கள். முதலாவது வானத்தை அடைந்வுடன் அதன் கதவை தட்டினார்கள். முதலாவது வானத்தில் உள்ள வானவர்கள். யார் வந்திருப்பது என்று கேட்டார்கள். ஜிப்ரீல் வந்துள்ளேன் உங்களுடன் வேறு யாரும் வந்துள்ளாரா? ஆம்! முஹம்மத் நபி வந்துள்ளார். அவர் இங்கே அழைத்து வருவதற்கு அனுமதி உள்ளதா? ஆம்! அல்லாஹ்வுடைய அனுமதியினால் அழைத்து வந்துள்ளேன். இப்போது முதலாம் வானத்தில் கதவு திறக்கப்படுகிறது. நபி (ஸல்) அவர்களும் ஜிப்ரீல் (அலை) அவர்களும் உள்ளே செல்கிறார்கள். முதலாவது வானத்தில் ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் எடுத்துக் காட்டினான் ஆதம் நபிக்கு நபி (ஸல்) அவர்கள் ஸலாம் சொல்கிறார்கள். இப்பொழுது ஆதம் நபி வலது பக்கமாக திரும்பி சிரிக்கிறார்கள். இடது பக்கமாக திரும்பி அழுகிறார்கள். அதற்கான காரணத்தை நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் கேட்டபோது வலது பக்கமாக உள்ளவர்கள் உங்கள் சமுதாயத்தில் சொர்கம் செல்லக் கூடியவர்கள். இடது பக்கமாக உள்ளவர்கள் உங்கள் சமுதாயத்தில் நரகம் செல்லக் கூடியவர்கள். என்று கூறினார்கள்.
இதன் பின் இரண்டாவது வானத்திற்கு செல்கிறார்கள். இரண்டாம் வானத்தின் கதவை தட்டுகிறார்கள் முதலாவது வானத்தில் நடந்தைப் போன்றே சம்பாசனை நடக்கிறது. இரண்டாவது வானத்திற்குள் சென்றவுடன் அங்கு ஈஸா (அலை) அவர்களையும் யஹ்யா (அலை) அவர்களையும் நபி (ஸல்) அவர்கள் சந்திக்கிறார்கள். மூன்றாம் வானத்தில் யூசுப் நபியை சந்திக்கிறார்கள். நான்காம் வானத்தில் இத்ரீஸ் நபியை சந்திக்கிறார்கள். ஐந்தாம் வானத்தில் ஹாரூன் நபியை சந்திக்கிறார்கள். ஆறாம் வானத்தில் மூஸா நபியை சந்திக்கிறர்கள் ஏழாம் வானத்தில் இப்றாஹீம் நபியை சந்திக்கிறார்கள்.
இப்றாஹீம் (அலை) அவர்கள் பைதுல் மஃமூர் பள்ளிவாசலில் தனது முதுகை சாய்த்தவர்களாக அமர்ந்திருந்தார்கள்.
பைத்துல் மஃமூர்
பைத்துல் மஃமூர் என்பது மலக்குமார்களால் அல்லாஹ்வை வணங்குவதற்காக அமைக்கப்பட்ட பள்ளியாகும். அந்த பைத்துல் மஃமூர்க்குள் ஒரு நாளைக்கு எழுபது ஆயிரம் மலக்குமார்கள் உள்ளே செல்வார்கள். உள்ளே சென்ற மலக்குமார்கள் மீண்டும் வெளியேவர மாட்டார்கள். மறுநாள் புதிதாக எழுபது ஆயிரம் மலக்குமார்கள் உள்ளே செல்வார்கள் இப்படி ஒவ்வொரு நாளும் நடந்துகொண்டே இருக்கும்.
ஸித்ரதுல் முன்தஹா
ஸித்ரதுல் முன்தஹா என்பது இலந்தை இலை மரமாகும். இதனுடைய வேர் பகுதி ஆறாம் வானத்தில் இருந்து ஆரம்பமாகி ஏழாம் வானத்தில் விருட்சமாக அல்லாஹ் படைத்துள்ளான். அதன் இலைகள் யானையுடைய காதுகள் அளவுக்கு இருக்கும். அதனுடைய பழங்கள் பெரிய பெரிய கூஜாக்களைப் போன்று இருக்கும். அந்த இலந்தை மரத்தை சூழாக பிரகாசமாக வெளிச்சமாக இருக்கும். தங்கத்திலாலான வெட்டுக் கிளிகள் அதனை சூழாக பறந்து கொண்டே இருக்கும்.
நான்கு நதிகள்
ஸித்ரதுல் முன்தஹா மரத்தின் வேர் பகுதியில் இருந்து நான்கு நதிகள் ஓடிக்கொண்டு இருக்கிறது. அதில் இரண்டு நதிகள் (ஸல்ஸபீல், கவ்ஸர்) சொர்கத்திற்குள்ளும் மற்ற இரண்டு நதிகள் (நைல், யூப்ரடீஸ்) சொர்கத்திற்கு வெளியேயும் உள்ளது.
இந்த இடத்தில் வைத்து நபி (ஸல்) அவர்களுக்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் பாலுள்ள கிண்ணத்தையும், மது உள்ள கிண்ணத்தையும் கொடுக்கும் போது நபி (ஸல்) அவர்கள் பாலுள்ள கிண்ணத்தை தெரிவு செய்தார்கள். அப்போது நீங்கள் இயற்க்கை மார்க்கத்தை தெரிவு செய்துவிட்டீர்கள். என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூறினார்கள். மேலும் அந்த இடத்தில் வைத்து மூன்று கட்டளைகள். நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்டன.
1. தொழுகை
2. ஸூரதுல் பகரா அத்தியாயத்தின் கடைசி மூன்று வசனங்கள்.
3. இணைவைக்காத நிலையில் பெரும்பாவங்கள் செய்திருப்பின் அவர்களுக்கு மன்னிப்பு என்ற மூன்று கட்டளைகள் வழங்கப்பட்டன.
மூஸா நபியும் தொழுகையும்
நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பேசிவிட்டு திரும்பும் போது மூஸா நபி அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ் என்ன சொன்னான் என்று கேட்ட போது ஐம்பது நேரத்து தொழுகையை அல்லாஹ் என் சமுதாயத்தின் மீது கடமையாக்கினான் என்று சொன்ன உடன் அதற்கு மூஸா நபி உமது மக்கள் ஐம்பது நேரத் தொழுகையை தொழ மாட்டார்கள். அல்லாஹ்விடம் சென்று குறைத்து வாருங்கள். என்று சொன்னவுடன் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் சென்று பேசிக் குறைக்கின்றார்கள். இறுதியில் ஐந்து நேரத் தொழுகையை பெற்றுக்கொண்டு வரும்போது மீண்டும் மூஸா நபி ஐந்து நேரத் தொழுகையையும் உமது சமுதாயம் தொழமாட்டார்கள். இதையும் அல்லாஹ்விடம் சென்று குறைத்து வாருங்கள். என்று கூறிய போது நபி (ஸல்) அவர்கள் எனக்கு வெட்கமாக உள்ளது என்று வந்து விடுகின்றார்கள். எவர் ஐந்து நேரத் தொழுகையை சரியாகத் தொழுகிறாரோ அவர் ஐம்பது நேரத் தொழுகையை தொழுததிற்கு சமனாகும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்களும், பைத்துல் முகத்திஸூம்
நபி (ஸல்) அவர்கள். மிஃராஜ் சென்று வந்த செய்தியை மக்களிடத்தில் சொல்லிய போது முஷ்ரிகீன்கள் அதை மறுத்தார்கள். அத்துடன் கேலி செய்ய ஆரம்பித்தார்கள். குறிப்பிட்ட இந்த இரவில் யாரும் போய்வர முடியாத இந்த பயணத்தை இவர் சென்றுவந்தாராம். என்று பரிகாசம் செய்ய ஆரம்பித்தனர். இப்பொழுது பைத்துல் முகத்திஸூக்கு சென்றுவந்தவர்கள். நபி அவர்களிடம் சில கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்கள். ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் தனது வாழ்க்கையில் ஒரு தடவை கூட பைத்துல் முகத்திஸூக்கு சென்று வந்தது கிடையாது. இவர்கள் நபியவர்களிடம் பைத்துல் முகத்திஸ் பள்ளியில் உள்ள சில வர்ணனை பற்றி கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அதைப் பற்றிய சரியாக தெரியாததினால் தடுமாற்றத்திற்குள் ஆளான போது இப்பொழுது அல்லாஹ் அந்த பைத்துல் முகத்திஸ் பள்ளியை நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் அப்படியே கொண்டுவந்து காட்டினான். அதைப் பார்த்துக்கொண்டே நபி (ஸல்) அவர்கள் முஷ்ரிகீன்களுடைய கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள் (முஸ்லிம்: 278)
நபியவர்கள் அல்லாஹ்வைக் கண்டார்களா?
மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரழி) அவர்கள் ஆயிஷா (ரழி) அவர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது ஆயிஷா (ரழி) அவர்கள் மூன்றில் ஒன்றை யார் கூறினாலும் அவர் அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டிவிட்டார். என்று கூறிவிட்டு முதலாவது யார் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை நேரடியாக பார்த்ததாக கூறுகிறாரோ அவர் அல்லாஹ் மீது இட்டுக் கட்டிவிட்டார். என்று கூறியதும் சாய்ந்திருந்த மஸ்ரூக் அவர்கள் உம்முல் முஃமினீன் அவர்களே! நிதானித்துக் கூறுங்கள். அவனை அவர் தெளிவான அடிவானத்தில் கண்டதாக அல்லாஹ் கூறுகின்றனே என்று கேட்டபோது அதற்கு ஆயிஷா (ரழி) அவர்கள் இதைப் பற்றி முதன் முதலாக அல்லாஹ்வின் தூதரிடம் நான் தான் கேட்டேன் அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களை நேரடியாகக் கண்ட செய்தியைத் தான் அந்த வசனத்தின் மூலமாக அல்லாஹ் கூறுகிறான். என்று கூறினார்கள். (நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களை இரண்டு தடவை அவர்களின் நிஜ உருவத்தில் நேரடியாக கண்டார்கள். ஒரு தடவை ஹிராக் குகையில் இருந்து வெளிவரும் பொழுது ஜிப்ரீல் (அலை) அவர்கள் வானத்திற்கும் பூமிக்கும் இடைப்பட்ட பெரிய ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்தவராக இறக்கையை விரித்த வண்ணமாக காணப்பட்டார்கள். இரண்டாவது தடவை சித்ரதுல் முன்தஹாவில் வைத்து ஜிப்ரீல் (அலை) அவர்களின் நிஜ உருவத்தில் நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள்.) இதைத்தான் அல்லாஹ் குர்ஆனில் ‘அவர் தெளிவான அடிவானத்தில் அவரைக் கண்டார்’ (அல்குர்ஆன் 81:23) ‘மற்றொரு முறையும் அவரை அவர் கண்டார்’ (அல்குர்ஆன் 53:13) இந்த இரண்டு வசனங்களும் நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களை நேரடியாக கண்டதாக தெளிவு படுத்தப்படுகிறது.
இரண்டாவது அல்லாஹ்வின் தூதர் இறைவேத்தில் எதையாவது மறைத்து விட்டார்கள் என்று எவராவது கூறினால் அவர் அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டியவராவார்.
மூன்றாவது நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான அறிவு இருக்கிறது என்று யாராவது கூறினால் அவரும் அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டியவராவார். என்று ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்.
மிஃராஜின் போது நபி (ஸல்) அவர்களுக்கு நரகத்தில் ஒவ்வொரு காட்சிகளையும் அல்லாஹ் எடுத்துக் காட்டினான். அதே போன்று சுவர்க்கத்தில் ஒவ்வொரு இன்பங்களையும் அல்லாஹ் எடுத்துக் காட்டினான்.
எனவே இந்த மிஃராஜின் மூலம் அல்லாஹ் அவனது ஆற்றலை வெளிக்காட்டுவதோடு நபி (ஸல்) அவர்களுக்கு தனது அத்தாட்சிகளை காட்டி உலக மக்களுக்கு இந்த செய்தி வரலாறு படைத்ததாக அமைத்துள்ளான்.

Thursday 28 April 2016

சோதனைகளில் உறுதி

(புதிய முஸ்லிம்களுக்காக) இஸ்லாத்தினை தனது வாழ்வியலாக எடுத்துக்கொண்ட சகோதர சகோதரிகளுக்கான வெளியீடு.
வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ M.A.

Tuesday 12 April 2016

அன்பை வளர்க்கும் அன்பளிப்புகள் !

rice plant
             இஸ்லாம் மார்க்கம் சக மக்களுடன் அன்பாகவும், பாசமாகவும் இணைந்து சந்தோசமாக வாழ வேண்டும் என்பதற்காக பல வழிகளை நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமான ஒன்று தான். அனபளிப்புகளை மாறி, மாறி கொடுத்துக் கொள்வதாகும். அன்பளிப்புகளை மாறி, மாறி, கொடுப்பதன் மூலம் மனிதர்களுக்கு மத்தியில் அன்பும், ஒற்றுமையும் அதிகரித்துக் கொண்டே போகும். எப்படி ஒரு மனிதனுக்கு ஸலாம் சொல்லும் போது அன்புகள் பறிமாறப் படுகின்றனவோ அது போல அன்பளிப்புகள் மூலம் அன்புகளும் பறிமாறப் படுகின்றன. அதனால் தான் நீங்கள் சமைத்தால் அதில்தண்ணீரை கொஞ்சம் ஊற்றி பக்கத்து வீட்டாருக்கு கொடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதுவும் ஒரு வகை அன்பளிப்பாகும். இதன் மூலம் பக்கத்து வீட்டார்கள் மூலம்அன்பு என்ற உறவுகள் பலப்படும்.
இந்த அன்பளிப்புகள் விடயத்தில் இஸ்லாம் நமக்கு எப்படி வழிக் காட்டுகிறது என்பதை தொடர்ந்து அவதானிப்போம்.
சமமாக கொடுக்கப்படல்
அன்பளிப்புகள் யாரும் யாருக்கும் கொடுக்கலாம். அதே நேரம் தன் பிள்ளைகளுக்கு அன்பளிப்புகள் கொடுக்கும் போது எந்த பாகுபாடும் காட்டாமல், அனைவருக்கும் ஒரே மாதிரி சமமாக கொடுக்கப்பட வேண்டும். ஒருவருக்கு ஒரு மாதிரி, மற்றொருவருக்கு இன்னொரு மாதிரி என்று வழங்கப்படுமேயானால் அது ஒரு பிள்ளைக்கு செய்யும் பெரிய அநியாயமாகும். அந்த அநியாயத்திற்கு மறுமையில் தண்டனை வழங்கப் படும். பின் வரும் சம்பவத்தை கவனியுங்கள்.
.” நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நான் சிறுவனாக இருந்தபோது) என் தந்தை தமது செல்வத்தில் ஒன்றை எனக்குத் தானமாக வழங்கினார்கள். அப்போது என் தாயார் அம்ரா பின்த் ரவாஹா (ரலி) அவர்கள் என் தந்தையிடம் “நீங்கள் இதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சாட்சியாக ஆக்காத வரை நான் இதை ஒப்புக்கொள்ளமாட்டேன்” என்று கூறினார். ஆகவே, என் தந்தை எனக்குத் தானமாக வழங்கியதற்கு நபி (ஸல்) அவர்களைச் சாட்சியாக்குவற்காக அவர்களிடம் சென்றார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தந்தையிடம், “உங்கள் பிள்ளைகள் அனைவருக்கும் இதைச் செய்தீர்களா?” என்று கேட்டார்கள். என் தந்தை, “இல்லை” என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; உங்கள் பிள்ளைகளிடையே நீதியாக நடந்துகொள்ளுங்கள்” என்று கூறினார்கள். உடனே என் தந்தை (வீட்டுக்குத்) திரும்பி வந்து, அந்தத் தானத்தைத் திரும்ப வாங்கிக்கொண்டார்கள். ( முஸ்லிம் 3325 )
எனவே பிள்ளைகளுக்கு மத்தியில் பாரபட்சம் காட்டக் கூடாது. அப்படி காட்டினால் மறுமையில் தண்டிக்கப் படுவார் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
அன்பளிப்புகளை திரும்ப பெறல் கூடாது
ஒருவருக்கு அன்பளிப்புகளை கொடுத்து விட்டு, ஏதோ ஒரு பிரச்சனையினால் அதை திரும்ப கேட்க கூடாது. அப்படி கேட்பதை இஸ்லாம் தடை செய்கிறது.
பின் வரும் ஹதீஸ்களை கவனியுங்கள்.
“உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஒருவரை அல்லாஹ்வின் பாதையில் (பயணம் மேற்கொள்வதற்காக) உயர்ரகக் குதிரையொன்றில் (அவருக்கே அதைத் தானமாகக் கொடுத்து) அனுப்பிவைத்தேன். அந்தக் குதிரைக்காரர் அதை (சரியாகப் பராமரிக்காமல்) பாழாக்கிவிட்டார். அவர் அதை மலிவான விலைக்கு (கேட்டால்கூட) விற்றுவிடுவார் என்று நான் எண்ணினேன். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அது குறித்துக் கேட்டேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அதை விலைக்கு வாங்காதீர். உமது தானத்தைத் திரும்பப்பெறாதீர். தனது தானத்தைத் திரும்பப் பெறுபவன் நாய்க்கு நிகரானவன் ஆவான். தான் எடுத்த வாந்தியைத் தானே தின்கிறது நாய்” என்றார்கள்.
– மேற்கண்ட ஹதீஸ் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், “அதை அவர் உமக்கு ஒரு வெள்ளிக் காசுக்குக் கொடுத்தாலும் சரி, அதை விலைக்கு வாங்காதீர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது. ( முஸ்லிம் 3313 )
எனவே கொடுத்த அன்பளிப்புகளை திரும்ப பெறக் கூடாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஆயுட்கால அன்பளிப்புகள்
. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இது, உனக்கும் உன் சந்ததிகளுக்கும் உரியது என ஒரு பொருளை ஒருவர் ஆயுட்கால அன்பளிப்பாக வழங்கினால்,அவரது சொல்லே (அந்தப் பொருளில்) அவருக்குரிய உரிமையை நிறுத்திவிடுகிறது. அது யாருக்கு ஆயுட்கால அன்பளிப்பாக வழங்கப்பட்டதோ அவருக்கும் அவருடைய சந்ததிகளுக்குமே உரியதாகும்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( முஸ்லிம் 3333 )
மேலும் “ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் மற்றொருவருக்கு ஆயுட்கால அன்பளிப்பு வழங்கினால், அது அன்பளிப்பு வழங்கப்பட்ட மனிதருக்கும் அவருடைய சந்ததிகளுக்குமே உரியதாகும். அவர், “நான் இ(ந்தச் சொத்)தை உமக்கும் உம்முடைய சந்ததிகளுக்கும்,உங்களில் ஒருவர் உயிரோடிருக்கும்வரை வழங்கிவிட்டேன்” என்று கூறி அன்பளிப்பாக வழங்கினாலும் அது அன்பளிப்பு வழங்கப் பட்டவருக்கே உரியதாகும். அது (அவரது ஆயுட் காலத்திற்குப் பின்), அன்பளிப்பு வழங்கியவரிடம் திரும்பாது. காரணம், (அன்பளிப்பு வழங்கப்பட்டவரின்) வாரிசுகளுக்குப் போய்ச் சேரும் வகையிலேயே அவர் நன்கொடை வழங்கியுள்ளார்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 3334 )
மேலும் ” ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மதீனாவிலிருந்த ஒரு பெண்மணி தம் புதல்வர் ஒருவருக்குத் தமது தோட்டமொன்றை ஆயுட்கால அன்பளிப்பாக (உம்றா) வழங்கினார். பிறகு அந்தப் புதல்வர் இறந்துவிட்டார். அதன் பிறகு அந்தப் பெண்ணும் இறந்துவிட்டார். அந்தப் புதல்வர் குழந்தைகளை விட்டுச்சென்றிருந்தார். அந்தப் புதல்வருக்குச் சகோதரர்களும் இருந்தனர். அவர்கள் ஆயுட்கால அன்பளிப்பு வழங்கிய அப்பெண்ணின் மைந்தர்கள் ஆவர். (அந்தப் புதல்வரின் இறப்புக்குப் பின்,) அன்பளிப்பு வழங்கிய அப்பெண்ணின் மைந்தர்கள் “தோட்டம் திரும்ப எங்களுக்கே கிடைக்கும்” என்று கூறினர். அன்பளிப்புப் பெற்ற அப்புதல்வரின் மகன்கள், “இல்லை; அதன் உரிமை. வாழ்ந்த போதும் இறந்த பின்பும் எங்கள் தந்தைக்கே உரியது”என்று கூறினர்.
பின்னர் இவ்வழக்கை (மதீனாவின் அன்றைய ஆளுநராயிருந்த) உஸ்மான் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான தாரிக் பின் அம்ர் (ரஹ்) அவர்களிடம் கொண்டு சென்றனர். தாரிக் பின் அம்ர், (தம்மிடம்) ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களை வரவழைத்(து அதைப் பற்றி விசாரித்)தார். அப்போது ஜாபிர் (ரலி) அவர்கள் “ஆயுட்கால அன்பளிப்பு,அன்பளிப்பு பெற்றவருக்கே உரியதாகும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனச் சாட்சியமளித்தார்கள்.
இதன்படியே தாரிக் பின் அம்ரும் தீர்ப்பு வழங்கினார். பிறகு தாரிக், (கலீஃபா) அப்துல் மலிக் பின் மர்வானுக்குக் கடிதம் எழுதி விவரத்தைத் தெரிவித்தார். ஜாபிர் (ரலி) அவர்களின் சாட்சியத்தையும் தெரிவித்தார். அப்போது அப்துல் மலிக் பின் மர்வான் “ஜாபிர் சொன்னது உண்மையே” என்று கூறினார். பின்னர் இதையே தாரிக் நடைமுறைப்படுத்தினார். ( முஸ்லிம் 3340)
மேலும். ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இது உனக்கும் உன் சந்ததிக்கும் உரியதாகும்” என்று கூறி வழங்கப்படும் ஆயுட்கால அன்பளிப்புக்கே அனுமதியளித்தார்கள். “உன் ஆயுள் முழுவதும் இது உனக்குரியதாகும்” என்று (மட்டும்) கூறினால், அது (அன்பளிப்பு பெற்றவரின் ஆயுட்காலத்திற்குப் பின்) அன்பளிப்பு வழங்கியவருக்கே திரும்பிவிடும். (முஸ்லிம் 3335 )
எனவே தனது தோட்டத்தையோ, தனது விவசாய காணியையோ ஒருவர் மற்றொருவருக்கு வழங்கி இது உனக்கு மட்டும் உரியது என்ற அன்பளிப்பாக கொடுத்தால், அவர் மரணித்த பின் அந்த அன்பளிப்பை கொடுத்தவரிடமே போய் சேர்ந்து விடும். அதே நேரம் உங்களில் ஒருவர் உயிரோடு இருக்கும் வரை என்று கூறி அன்பளிப்பாக கொடுத்தால் அது அவரின் பரம்பரை பரம்பரையாக பெற்றவருக்கே சொந்தமாகும்.

Wednesday 6 April 2016

[02] இறைமறையில் அறிவியல் அற்புதங்கள்

மனிதன் மண்ணால் படைக்கப்பட்டானா?
முதல் மனிதன் எவ்வாறு படைக்கப்பட்டான் என்பது பற்றி அறிந்து கொள்வது, “கரு”வில் குழந்தையின் வளர்ச்சியின் நிலைகள் பற்றி தெளிவாக புரிந்து கொள்வதற்கு துணையாக இருக்கும் என்பதனால் அது பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது, அறிவியல் உலகம் என்ன முடிவு எடுத்திருக்கிறது என்று இந்த தொடரில் பார்ப்போம்.
முதல் மனிதன் எவ்வாறு படைக்கப்பட்டான் என்பதில் மதவாதிகளுக்கும், (யூதர்கள், கிருஸ்தவர்கள்) “இயற்கையே கடவுள்” என நம்பிக்கை கொண்டுள்ள நாத்திகவாதிகளுக்கும் இடையில் நீண்ட நாட்களாகவே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன.
“பாத்திரங்கள் எவ்வாறு மண்ணிலிருந்து செய்யப்படுகிறதோ, அது போல் மண்ணிலிருந்து நேரடியாக மனித உருவம் செய்யப்பட்டு உயிரூட்டப்பட்டது” என்று மதவாதிகள் நம்பி வருகிறார்கள்.
இயற்கையை இறைவனாக ஏற்றுக் கொண்டவர்கள் “அமீபா” என்ற ஒரு செல் உயிரினத்திலிருந்து வளர்ச்சி அடைந்து இயற்கையாக பல மாற்றங்களுக்குள்ளாகி பல்வேறு உயிரினங்களாக தோன்றி, அது குரங்கு நிலைக்கு வந்து, அதன் பிறகு நிகழ்ந்த மாற்றத்தில் குரங்கிலிருந்து முதல் மனிதன் தோன்றினான் என்ற டார்வினின் (செத்து போன) தத்துவத்தை(?) நம்பி வருகிறார்கள்.
இந்த இரண்டு கருத்துமே தவறானது என்ற முடிவுக்கு வந்துள்ளது இன்றைய விஞ்ஞான உலகம். “அமீபா”விலிருந்து இயற்கையாகவே வளர்ச்சி அடைந்து, மனிதனுடைய நிலைக்கு வந்திருப்பது உண்மை என்று நாம் நம்ப வேண்டும் எனில் அந்த வளர்ச்சி தொடர்ந்து நடைபெற்று, மனிதனிலிருந்து வேறு ஒரு உயிரினம் உருவாகி இருக்க வேண்டும். மனிதன் உருவாகி பல ஆயிரம் ஆண்டுகள் ஆகியும் அதுபோன்ற மாற்றம் நிகழ்ந்துள்ளதாக செய்திகள் இல்லை. அவ்வாறு நிகழ்வதற்கான அறிகுறிகூட இல்லை. குரங்கு மனிதனாக மாறியது உண்மை எனில் இப்போதுள்ள குரங்குகள் ஏன் மனிதனாக மாறுவதில்லை?
படைப்பாளன் இல்லாமல் ஒரு பொருள் உருவாகும் என்பதை எந்த காலத்தில் வாழ்ந்த அறிவியல் அறிஞர்களாலும் நிரூபணம் செய்ய முடியவில்லை. அவ்வாறு கற்பனை செய்துகூட பார்க்க முடியாது என்பது தான் உண்மை. எனவே டார்வினின் “இயற்கையாக எல்லாப் பொருளும் வந்தன” என்ற தத்துவம் (?) குப்பையில் தூக்கி எறியப்பட வேண்டிய ஒன்று என்ற முடிவுக்குத்தான் வர முடிகிறது.
மண்ணிலிருந்து நேரடியாக மனித உருவம் செய்யப்பட்டு உயிரூட்டப்பட்டது என்று மதவாதிகளால் நீண்ட காலமாக நம்பப்பட்டு வரும் தகவலையும் அறிவியல் உலகம் ஏற்றுக் கொள்ளவில்லை. அவ்வாறு செய்யப்பட்டிருப்பதற்கு சாத்தியங்கள் குறைவு என்பதற்கு பல காரணங்களை முன் வைக்கிறார்கள்.
மண்ணின் “மூல”சத்திலிருந்து படைக்கபட்டான் மனிதன்
மண்ணையும், மனிதனையும் ஆய்வு செய்த போது இரண்டின் மூலங்களும் ஒரே பண்புடையதாக இருக்கிறது, எனவே மண்ணின் மூலப் பொருள்களை எடுத்துதான் மனிதன் படைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று இன்றைய அறிவியல் அறிஞர்கள் கூறி வருகிறார்கள். அவர்கள் இந்த முடிவு எடுப்பதற்கு பல ஆண்டுகள் ஆய்வு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
(மண்ணிற்கும் மனிதனுக்கும் பொதுவாக அமைந்திருக்கும் வேதியில் தனிமங்கள்: பிராணவாய்வு, கால்சியம், பொட்டாசியம், உப்பு, கார்பன், ஹைட்ரஜன், பாஸ்பரஸ், கந்தகம், சோடியம், நைட்ரஜன், குளோரின், மெக்கினீசியம், இரும்பு, செம்பு போன்றவைகளாகும்.)
ஆனால் அல்லாஹ்வின் அருள்மறை குர்ஆனையும் நபிமொழியினையும் படித்துப் பார்த்தால் இது புது கருத்தல்ல, 1400 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டுவிட்ட ஒரு தகவல் ஆகும். அந்த உண்மையை புரிந்து கொள்வதற்குதான் இத்தனை ஆண்டுகள் ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் நமக்கு ஏற்பட்டுள்ளது என்பது தெரியவரும்.
முதல் மனிதனும், குர்ஆனும்
மனிதனை மண்ணிலிருந்து படைத்தோம், களிமண்ணிலிருந்து படைத்தோம் என்று குர்ஆனில் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்த வசனங்களை மட்டும் படித்து பார்ப்பவர்கள் மண்ணிலிருந்து பாத்திரங்கள் செய்யப்படுவது போல் நேரடியாக மனித உருவம் செய்யப்பட்டு உயிரூட்டப்பட்டான் என்று தான் புரிந்து கொள்கின்றனர். உண்மை அது அல்ல. மனிதனை படைப்பதற்கு தேவைப்படும் மூலக்கூறுகள் மண்ணிலிருந்து எடுக்கப்பட்டு அதன் மூலமாகத்தான் மனிதன் படைக்கப்பட்டான் என்ற செய்திதான் குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை குர்ஆன் முமுவதையும் படித்துப் பார்க்கும் ஒருவரால் எளிதாக புரிந்து கொள்ளலாம்.
மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டான் என்று ஒரு வசனத்திலும், மண்ணால் படைக்கப்பட்டான் என்று வேறொரு வசனத்திலும் கூறப்பட்டுள்ளது.

هُوَ الَّذِي خَلَقَكُمْ مِنْ طِينٍ

அவன் (அல்லாஹ்) தான் உங்களை களிமண்ணால் படைத்தான்.
அல் குர்ஆன் 6: 2

وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَكُمْ مِنْ تُرَابٍ

இன்னும் அவன் (அல்லாஹ்) உங்களை மண்ணிலிருந்து படைத்திருப்பது அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்.
அல் குர்ஆன் 30: 20
குர்ஆனில் ஆதி மனிதனை படைத்த செய்தியை கூறிவரும் போது “தீன்” (களிமண்) என்ற வார்த்தையை 6 முறையும், “துராப்” (சாதாரண மண்) என்ற வார்த்தையை 6 முறையும் பயன்படுத்தி அல்லாஹ் கூறியுள்ளான். இயற்கையில் களிமண்ணுடைய தன்மையும், சாதாரண மண்ணுடைய தன்மையும் ஒன்றல்ல. சில மாறுபட்ட பயன்களை தரக்கூடியது. இந்த இரண்டு வித மண்ணும் மனிதனுடைய படைப்பில் நிச்சயமாக பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அதுவும் சரிசம அளவில் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். காரணம் மனிதனை களிமண்ணிலிருந்து படைத்தோம் என்ற செய்தியையும், சாதாரண மண்ணிலிருந்து படைத்தோம் என்ற செய்தியையும் குர்ஆனில் சமமான முறையில் சொல்லப்பட்டுள்ளது.
“தீன்” என்ற வார்த்தையும், “துராப்” என்ற வார்த்தையும் ஒரே பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று வாதிப்பது தவறான போக்காகும். காரணம் அல்லாஹ் வெறுமனே ஒரு வார்த்தையைத் தேர்ந்தெடுத்து செய்திகளை சொல்வதில்லை. அவன் பல்வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒரே செய்தியை சொன்னாலும், அந்த ஒவ்வொரு வார்த்தையிலும் ஒவ்வொரு அர்த்தம் நிச்சயமாக மறைந்திருக்கத்தான் செய்யும். மனிதனை களிமண்ணில்தான் படைத்தான் என்றால் “தீன்” என்ற வார்த்தை மட்டும் போதுமானது. அல்லது சாதாரண மண்ணில் மனிதன் படைக்கப்பட்டிருந்தால் “துராப்” என்ற வார்த்தை மட்டும் போதுமானது. அவ்வாறிருந்தும் இரண்டு வார்த்தைகளையும் இந்த தொடரில் பயன்படுத்தப்பட்டிருப்பது மனிதன் இந்த இருவகை மண்ணிலிருந்தும் தான் படைக்கபட்டுள்ளான் என்ற தகவலைச் சொல்வதற்காகத்தான் அல்லாஹ் அவ்வாறு பயன்படுத்தி இருக்கலாம் என்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
அதாவது முதலில் களிமண்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை பின்வரும் 32வது அத்தியாத்தில் 7-வது வசனத்தில் இடம் பெற்றிருக்கும் வசனத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். அந்த வசனத்தில் “மனிதனின் படைப்பை களிமண்ணிலிருந்துதான் ஆரம்பித்தான்” என்று இடம் பெற்றுள்ளது. அதன் பிறகு அந்த களிமண்ணில் சாதாரண மண்ணையும் சேர்த்து கலவையாக ஆக்கப்பட்டு அதிலிருந்து மூலக்கூறுகளை எடுத்து மனிதன் படைக்கப்பட்டுள்ளான்.
(களிமண் கொண்டு மட்டும் எந்த பொருளையும் உருவாக்க முடியாது, களிமண் கொண்டு மட்டும் உருவாக்கப்படும் பொருள் காய்ந்துவிடும் போது விரிசல் ஏற்பட்டு, உறுதிவாய்ந்ததாக இருப்பதில்லை, பாத்திரங்கள், செங்கள் போன்ற பொருட்கள் செய்வதற்கு களிமண்ணுடன் மண்ணையும் சேர்க்கும் போதுதான் உறுதி கிடைக்கும், அதனால் தான் களிமண்ணில் பாத்திரம், செங்கள் செய்பவர்கள், வீடு கட்டுவர்கள் மண்ணையும் சேர்த்து கொள்வதைப் பார்க்கிறோம். அதுபோல் சாதாரண மண் கொண்டு எந்தப் பொருளையும் தயாரிக்க முடியாது. காரணம் ஒன்றோடு ஒன்று சேரும் பிசு பிசுப்பு தன்மை அதில் இருப்பதில்லை. ஒரு பொருளை உற்பத்தி செய்வதற்கு இரு வகை மண்ணும் அவசியப்படுகிறது என்பதை நாம் நடைமுறையில் அறிந்து வருகிறோம்.)
இந்த இரு வகை மண்ணின் கலவைதான் மனிதனின் படைப்பிற்கு அடிப்படை. இந்த இருவகை மண்ணிலிருந்து நேரடியாக மனித உருவம் செய்து, அந்த உருவத்தில் உயிரூட்டப்பட்டு மனிதன் படைக்கப்படவில்லை. மாறாக இந்த இரு வகை மண்ணின் கலவையினை பல வேதியில் மாற்றங்களுக்கு உட்படுத்தி, அந்த கலவையிலிருந்து மனிதனைப் படைப்பதற்கு தேவையான “மூல” த்தை எடுத்து அந்த மூலத்திலிருந்துதான் முதல் மனிதன் படைக்கப்பட்டான். இதனை நாம் கற்பனையாக சொல்லவில்லை. மனிதன் படைக்கப்பட்ட செய்தியினை கூறும் பின்வரும் இறைவசனங்கள், நாம் எடுத்து வைக்கும் வாதத்தை உறுதி படுத்துகிறது. மனிதன் எவ்வாறு படைக்கப்பட்டான் என்ற தகவலைத் தரும் வசனங்களை நிதானமாக படித்துப் பார்க்கும் இந்த கருத்தினை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.

الَّذِيْ أَحْسَنَ كُلَّ شَيْءٍ خَلَقَهُ وَبَدَأَ خَلْقَ الْأِنْسَانِ مِنْ طِينٍ

(அவன்) எத்தகையவனென்றால் அவன் படைத்த ஒவ்வொரு பொருளையும் (அதன் வடிவமைப்பையும்) மிக்க அழகாக்கி வைத்தான். மேலும் மனிதனின் படைப்பை களி மண்ணிலிருந்து ஆரம்பித்தான். 32: 7
இந்த வசனத்தில் “மனிதனின் படைப்பை களி மண்ணிலிருந்து ஆரம்பித்தோம்” என்று கூறப்பட்டுள்ளது. இதுதான் மனித படைப்பின் ஆரம்ப நிலை.
களி மண்ணிலிருந்து நேரடியாக மனிதம் உருவம் செய்து உயிரூட்டப்பட வில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது. மனிதனின் படைப்பை களி மண்ணிருந்து ஆரம்பித்து, எந்தந்த நிலையை அடைந்து, அது எவ்வாறு முழுமை அடைந்தது என்று அடுத்தடுத்த வசனங்களின் மூலம் அல்லாஹ் கூறி வருகிறான்.

إِنَّا خَلَقْنَاهُمْ مِنْ طِينٍ لازِبٍ

நிச்சயமாக நாம் அவர்களை பிசு பிசுப்பான களிமண்ணிலிருந்து படைத்திருக்கின்றோம். அல்குர்ஆன்: 37:11
இது மனித படைப்பின் இரண்டாவது நிலை
பிசு பிசுப்பான களிமண்ணிலிருந்து மனிதன் படைக்கப்பட்டதாக இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். களிமண் பிசுபிசுப்பான நிலைக்கு எப்போது மாறும்? களிமண்ணுடன் தண்ணீர் சேர்க்கப்படும் போது அது பிசுபிசுப்பான நிலைக்கு மாறி விடுகிறது. இந்த வசனத்தின் மூலம் மனிதனின் படைப்பில் தண்ணீரும் சேர்க்கப்பட்டுள்ளது என்ற செய்தியையும் சேர்த்து புரிந்து கொள்ள முடிகிறது. (மனிதன் உடலமைப்பில் 75 சதவீதம் தண்ணீர் இடம் பெற்றிருப்பது இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.) களிமண்ணில் தண்ணீர் சேர்த்து பிசு பிசுப்பான நிலைக்கு கொண்டு வரப்பட்டு சில காலம் அதே நிலையில் இருந்தது. (எவ்வளவு காலம் என்பது அல்லாஹ்விற்கு மட்டும் தெரிந்த விஷயம்.)

وَلَقَدْ خَلَقْنَا الْأِنْسَانَ مِنْ صَلْصَالٍ مِنْ حَمَأٍ مَسْنُونٍ

மாற்றமடைந்து துர்வாடை ஏற்படும் கறுப்பு மண்ணிலிருந்து மாறிய, தட்டினால் ஓசை வரும் களிமண்ணிலிருந்து நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம். அல் குர்ஆன்: 15: 26
இந்த வசனத்தில் மனித படைப்பின் மூன்றாவது மற்றும் நான்வாது நிலையினை அல்லாஹ் கூறி இருக்கிறான்.
“ஹமஉ” என்றால் கருப்பு மண் என்பது பொருளாகும். “மஸ்னூன்” என்றால் மாற்றமடைந்து துர்வாடை ஏற்படும் மண் என்பது பொருளாகும். மண், களிமண், தண்ணீர் ஆகிய மூன்றும் சேர்ந்த கலவையை அதே நிலையில் சில காலம் விட்டு வைக்கப்பட்டு விட்டது நீண்ட நாட்கள் (எவ்வளவு நாள் என்பதை அல்லாஹ் அறிவான்.) இருந்த அந்த கலவை சாக்கடை மண்ணைப்போல கருப்பு நிறமாக மாறி, துர்வாடை ஏற்படும் நிலைக்கு மாறிவிட்டது. (சாக்கடையில் நீண்ட நாட்கள் கிடக்கும் மண் கருப்பு நிறமாக மாறி, துர் நாற்றம் வீச ஆரம்பிக்கும் என்பதை நாம் அறிவோம்.) இது மனிதப்படைப்பின் மூன்றாவது நிலை.

خَلَقَ الْأِنْسَانَ مِنْ صَلْصَالٍ كَالْفَخَّارِ

சுட்டெடுத்த மண்பாண்டத்தைப் போல (தட்டினால்) ஓசை வரும் களிமண்ணால் அவன் (முதல்) மனிதரைப் படைத்தான். அல் குர்ஆன்: 55:1
இது மனிதப்படைப்பின் நான்காவது நிலை
“ஸல்ஸால்” என்பது மண் கலந்து சுட்டெடுக்கப்பட்ட காய்ந்த களி மண்ணாகும். அதனை தட்டினால் “ஸல், ஸல் என ஓசை தரும் என்பதால் அதற்கு “ஸல்ஸால்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த “ஸல்ஸால்” என்ற வார்த்தையின் மூலம்தான் முதல் மனிதனின் படைப்பில் களிமண்ணுடன் சாதாரன மண்ணும் சேர்க்கப்பட்டுள்ளது என்ற உண்மையை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. நான் ஆரம்பித்தில் குறிப்பிட்ட தகவலை இது ஊர்ஜிதம் செய்கிறது.

وَلَقَدْ خَلَقْنَا الْأِنْسَانَ مِنْ سُلالَةٍ مِنْ طِينٍ

நிச்சயமாக (முதல்) மனிதனை களி மண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். அல் குர்ஆன்: 23:12
இது மனிதப்படைப்பின் ஐந்தாவது நிலையாகும். முதல் மனிதன் களிமண்ணுடைய மூலச்சத்திலிருந்துதான் படைக்கப்பட்டிருக்க முடியும் என்று இன்று கண்டு பிடிக்கப்பட்ட அறிவியல் உண்மையை 1429 மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அறிவியில் அறிவு அறவே இல்லாத காலத்து மக்களுக்கு முதல் மனித படைப்பு எவ்வாறு நிகழ்ந்தது என்பதை மிக எளிமையாக இந்த குர்ஆன் எடுத்து சொல்லியிருக்கிறது. அது குர்ஆனின் அதிசயங்களில் ஒன்றாகும்.
அல்லாஹ் ஒரு பொருளைப் படைப்பதற்கு எந்த காரணங்களும் அவசியமில்லை. “குன்” என்று சொன்னால் அந்தப் பொருள் உடனடியாக உண்டாகிவிடும்.

إِنَّمَا أَمْرُهُ إِذَا أَرَادَ شَيْئاً أَنْ يَقُولَ لَهُ كُنْ فَيَكُونُ

அவன் யாதொரு பொருளை(ப் படைக்க) நாடினால், அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம் “ஆகுக!” எனக் கூறுவதுதான் உடனே ஆகிவிடும். அல் குர்ஆன்: 36: 82
எனினும் உலகில் ஒரு நியதியை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். வானத்தையும் பூமியையும் ஏழு நாட்களில் படைத்ததிருப்பதும் அந்த நியதிப்படிதான். (அல்லாஹ்விடத்தில் ஒரு நாள் என்பது நாம் கணக்கிடும் ஆயிரம் ஆண்டுகளுக்கு சமமானதாகும்.) எந்த பொருளையும் திடீரென படைத்து விடுவதில்லை. முதல் மனிதனை படைப்பதற்கு எந்த பொருளின் துணையும், எந்த முன்மாதிரியும் இல்லாமால் இறைவனால் படைக்க முடியும் என்றாலும் மண், களிமண், தண்ணீர் கலவையினை பல வேதியில் மாற்றங்களுக்கு உட்படுத்தி அதிலிருந்து மனிதனைப் படைப்பதற்கு தேவையான மூலப்பொருட்களை உருவாக்கி, அந்த மூலத்திலிருந்து முதல் மனிதனைப் படைத்துள்ளதும் இந்த நியதிப்படிதான்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்..

Friday 1 April 2016

இஸ்லாத்தின் பார்வையில் முட்டாள்கள் தினம் ஓர் ஆய்வு

உலகம் முழுவதும் ஏப்ரல் 1 சர்வதேச முட்டாள்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது அன்றைய தினத்தில் ஒருவர் மற்றொருவரை ஏமாற்றுவதும், மற்றவர்களைக் கிண்டலடிப்பதும், மற்றவர்களை முட்டாள்களாக ஆக்க நினைப்பதும், நடக்காத ஒன்றை நடந்ததாகச் சொல்வதும், மற்றவர்களை ஏமாற்றி அதிர்ச்சிக்குள்ளாக்குவதும், நக்கலடிப்பதும், பரிகாசம்செய்வதும், கேலி செய்வதும் வாடிக்கையாக உலகம் முழுவதும் நடந்தேறிக்கொண்டிருக்கிறது.
முட்டாள்கள் தினம் உருவானதற்கான பல கட்டுக்கதைகளும் கற்பனைக்கதைகளும் சொல்லப்படுவதுண்டு அவற்றில் சிலவற்றைப் பார்த்து விட்டு உண்மையான வரலாற்றைப் பார்ப்போம்:
  1. ரோமர்களின் மூடநம்பிக்கையின்படி புளூட்டோ என்ற கடவுள் பிராஸர்பினா என்ற யுவதியைக் கீழ் உலகிற்கு கடத்திச் சென்றதாகவும்,அவள் அழுது தன் தாயை உதவிக்கு அழைத்தாகவும், அவள் தாயோ அவளின் அழுகை சப்தத்தைக் கேட்டு இல்லாத இடத்தில் தேடியதாகவும் இந்தத் தவறான தேடுதலே முட்டாள்கள் தினம் உருவாகக் காரணம் எனவும் சொல்லப்படுகிறது.
  2. பைபிளின்படி நோவா (நூஹ் (அலை)) தான் முதல் முட்டாள் (நவூதுபில்லாஹ்) எனச்சொல்லப்படுகிறது. காரணம் வெள்ளப்பிரளயம் ஏற்பட்டு பூமி காய்வதற்கு முன்னால் நோவா ஒரு புறாவை அனுப்பி காய்ந்த, வறண்ட நிலத்தை தேடச் சொல்கிறார். ஈரமான பூமியில் காய்ந்த நிலம் எங்கே இருக்கும்? அதனால் தான் அவர் ஒரு முட்டாள் என்றும் அதை மையமாக வைத்தே முட்டாள்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது எனவும் சொல்லப்படுகிறது.
  3. 13 ஆம் நூற்றாண்டில் பிரிட்டஷில் வாழ்ந்த ஜான் என்ற மன்னர் எங்கே படையெடுத்துச் சென்றாலும் அந்தப்பகுதி “பொதுச்சொத்தாக” ஆக்கப்பட்டுவிடும். கௌதம் என்ற பகுதியில் நாட்டிங்கம்ஷைர் என்ற ஊருக்குள் அவர் படையெடுத்து வரும்போது அவ்வூர்வாசிகள் தங்களின் ஊரை மன்னர் அபகரித்துவிடக்கூடாது என்பதற்காக அவர்களை முட்டாள்களாக ஆக்க நினைத்து தண்ணீரில் நீந்துகின்ற மீனைப்பிடித்து தரையில் விடுவதும் பிறகு மீண்டும் நீரில் விடுவதுமான பல முட்டாள்தனமான காரியங்களைச் செய்கின்றனர் அவர்களின் முட்டாள்தனங்களைக்கண்ட மன்னர் அவர்களைத் தண்டிக்கிறார் இது தான் ஏப்ரல் 1 அன்று முட்டாள்கள் தினம் உருவாகக் காரணம் எனச்சொல்லப்படுகிறது. இன்னும் இவை போன்ற பல கற்பனைக் கதைகளும் புராணக்கதைகளும் சொல்லப்படுகிறது.
உண்மையான வரலாற்றுப்பிண்ணனி
காலண்டர் மாற்றமே முட்டாள்கள் தினம் உருவாக முக்கியக் காரணம். அதாவது கி.பி. 1582 வரை ஃபிரான்ஸில் ஏப்ரல் மாதம் தான் ஆண்டின் முதல் மாதமாகவும்,மார்ச் மாதம் ஆண்டின் இறுதியாகவும், மார்ச் 25 ல் இருந்து ஏப்ரல் 1 வரை புத்தாண்டுக் கொண்டாட் டங்களும் உலகம் முழுவதும் நடைபெற்று வந்தன.
“கிரிகோரி” என்கிற போப் தான் இன்று நடைமுறையில் இருக்கின்ற ஆங்கிலக் காலண்டரை உருவாக்கியவர். அதாவது ஜனவரியை ஆண்டின் முதல் மாதமாகவும் டிசம்பரை ஆண்டின் இறுதி மாதமாகவும் வைத்து உருவாக்கப்பட்ட இந்தக் காலண்டரை பலர் ஏற்றுக்கொண்டனர். இன்னும் சிலர் பழைய காலண்டர் முறையையே பின்பற்றி வந்தனர்.
புதிய காலண்டர் முறைப்படி மாறியவர்கள் பழைய காலண்டர் முறையைப் பின்பற்றி நடப்பவர்களை முட்டாள்கள் என கேலி பேசவும், கிண்டலடிக்கவும் ஆரம்பித்தனர். இதுவே நாளடைவில் ஏப்ரல் 1 அன்று முட்டாள்கள் தினம் அனுசரிக்கக் காரணமாக அமைந்து விட்டது.
ஃபிரான்ஸிலிருந்து லண்டன், அமெரிக்கா, மெக்ஸிகோ, ஸ்காட்லாந்து, இங்கிலாந்து, கரீபியன், ஜமைக்கா, கானா போன்ற நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்து இன்று உலகம் முழுவதிலும் உள்ள பல நாடுகளுக்கும் பரவி இருக்கிறது.
ஏப்ரல் ஒன்றைக்குறித்து தவறான கருத்து:
இன்று முஸ்லிம்களிடத்தில் ஒரு தவறான கருத்து பரவலாக பரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதாவது ஸ்பெயினிலிருந்து ஒட்டு மொத்த முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களின் சூழ்ச்சியினாலும் சதித்திட்டத்தினாலும் ஸ்பெயினை விட்டு வெளியேற்றப்பட்டனர். இதன் காரணமாக கிறிஸ்தவர்கள் தான் முஸ்லிம்களை முட்டாள்களாக்க இந்த தினத்தை உருவாக்கினார்கள் என்று முஸலிம்களே தவறாக விளங்கிக் கொண்டு அந்த தினத்தை நாம் ஆதரிக்கக்கூடாது என்று பரப்பிவருகின்றனர். மேற்கூறப்பட்ட காலண்டர் மாற்றமே முட்டாள்கள் தினம் உருவாக முக்கியக்காரணம் என்பதை முஸலிம்கள் முதலில் விளங்க வேண்டும்.
இஸ்லாத்தின் பார்வையில் முட்டாள்கள் தினம்
இஸ்லாம் முட்டாள்கள் தினத்தை எவ்வாறு பார்க்கிறது?
1. ஒருவர் மற்றொருவரைக் கிண்டலடிப்பதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.
“முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறிதொரு சமூகத்தாரைப் பரிகாசம்செய்ய வேண்டாம் ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்) அவர் களை விட மேலானவர்களாக இருக்கலாம், (அவ்வாறே) எந்தப் பெண்களும் மற்ற எந்த பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) – ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்”. அல்குர்ஆன் 49:11
2. ஒருவர் மற்றொருவரை ஏமாற்றுவதை இஸ்லாம் கடுமையாக எச்சரிக்கை செய்கிறது.
அளவு நிறுவையில் ஏமாற்றி மோசடி செய்த மத்யன் என்ற ஊர்வாசிகள் அழிக்கப்பட்டதை குர்ஆன் இவ்வாறு கூறுகிறது.
அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்குக் கேடு தான். 83:1
ஆகவே அவர்களை பூகம்பம் பிடித்துக் கொண்டது, அதனால் அவர்கள் (காலையில்) தம் வீடுகளில் இறந்தழிந்து கிடந்தனர். ஷுஐபை பொய்ப்பித்தவர்கள் தம் வீடுகளில் (ஒரு பொழுதும்) வாழ்ந்திராதவர்களைப் போல் ஆகிவிட்டனர். 7:91.92 11:94 29:36
நபி(ஸல்)அவர்கள் கடைத்தெருவில் உள்ள ஓர் உணவுக் குவியலைக் கடந்து சென்றார்கள். அப்போது அதனுள் தமது கையை நுழைத்தார்கள். அவர்களது கையில் ஈரம் பட்டது. உணவுக்காரரே (கடைக்காரரே) என்ன இது? எனக்கேட்க, “அல்லாஹ்வின் தூதரே மழை பொழிந்து (நனைத்து) விட்டது” என்று கூறினார். அதற்கு நபி(ஸல்)அவர்கள் மக்கள் பார்க்கும் அளவிற்கு அதை நீ மேலே வைத்திருக்க வேண்டாமா? என்று கூறிவிட்டு “எவர் ஏமாற்றுகிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்லர்”என்று கூறினார்கள். (முஸ்லிம் 295)
நபி(ஸல்)அவர்கள் எங்கள் வீட்டிலிருக்க என்னுடைய தாய் ஒரு நாள் என்னை அழைத்து, “இங்கே வா!நான் உனக்குத் தருகிறேன்”என்றார்கள். உடனே நபியவர்கள் என்ன கொடுக்க அழைத்தீர்? என்று என் தாயைப்பார்த்துக் கேட்க, அதற்கு என் தாய், “பேரீத்தம் பழம் கொடுக்க”என்றார்கள். “நீர் அவருக்கு எதையும் கொடுக்கவில்லையெனில் நீ பொய் கூறி விட்டாய் என்பதாக உன் மீது எழுதப்படும்” என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு ஆமிர் (ரலி)அறிவிக்கிறார்கள். (அபூதாவூத் 4993)
ஒட்டகம், ஆடு போன்ற கால்நடைகளை விற்பனை செய்வதற்காக அதன் பாலை (கறக்காது) தடுத்து நிறுத்தி (அவற்றின் மடியை கனக்கச்செய்து அதிகமாகப் பால் தருவது போன்று) காண்பித்து விடாதீர்கள் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (புகாரி 2148,முஸ்லிம் 3890)
“மோசடி செய்பவர் நரகத்தில் இருப்பார்! நம்முடைய கட்டளை யில்லாத ஒரு காரியத்தை யாரேனும் செய்தால் அது ஏற்றுக் கொள்ளப்படாது!” என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். (புகாரி 2142)
3. ஏமாற்றுதலின் மற்றொரு வகை பொய் பேசுவது.
பொய்யைக்குறித்தும் எச்சரிக்கை விடுக்கிறது இஸ்லாம் எண்ணற்ற குர்ஆன் வசனங்களும் நபிமொழிகளும் பொய்யின் விபரீதத்தை விளக்குகிறது.
“கேள்விப்பட்டதையெல்லாம் சொல்பவன் அவன் பொய்யன் என்பதற்குப் போதுமானதாகும்”. (முஸ்லிம்)
நிச்சயமாக உண்மை என்பது புண்ணியச் செயலுக்கு வழி காட்டுகிறது. புண்ணியச் செயல் சுவர்க்கம் செல்ல வழி காட்டுகிறது. திண்ணமாக ஒரு மனிதன் உண்மையையே பேசிக் கொண்டி ருக்கிறான். இறுதியில் அவன் அல்லாஹ்விடத்தில் உண்மையாளன் என்று எழுதப்படுகிறான்.
மேலும் நிச்சயமாகப் பொய் என்பது தீமை செய்ய வழி காட்டுகிறது. தீமை நரகிற்கு வழி காட்டுகிறது. நிச்சயமாக ஒரு மனிதன் பொய் பேசிக் கொண்டிருக்கிறான். இறுதியில் அல்லாஹ்விடத்தில் அவன் மகாப் பொய்யன் என்று எழுதப்பட்டு விடுகிறான். (புகாரி 6094, முஸ்லிம்)
4. ஏமாற்றுவதே கூடாது என்கிறது இஸ்லாம் அதை கண்டிப்புடன் எதிர்க்கிறது. ஏமாற்றுபவன் நிச்சயமாக ஷைத்தானாகத் தான் இருப்பான்!என்று குர்ஆன் கூறுகிறது
குறிப்பிட்ட மரத்திற்கருகில் நெருங்காதீர் என்ற இறைக்கட்டளையை ஆதமிற்கும் ஹவ்வாவிற்கும் மறக்கடிக்கச் செய்து, “அந்த மரத்தின் பக்கம் சென்றால் நீங்கள் வானவர்களாக ஆகி விடுவீர்கள். அப்படி நீங்கள் ஆகக் கூடாது என்பதற்காகத்தான் அல்லாஹ் இவ்வாறு தடை செய்திருக்கிறான் என்று ஆசை வார்த்தை கூறி இருவரையும் ஏமாற்றிவிட்டான். (அல்குர்ஆன7:20,20:120)
நம் பெற்றோரை வஞ்சகமாகப் பேசி ஏமாற்றியது மட்டுமல்லாது நம்மையும் நம்முடைய சந்ததிகளையும் அந்த ஷைத்தான் ஏமாற்றி நரகிற்கு கொண்டு செல்ல நினைக்கிறான்
“ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும் அவர்களுடைய மானத்தை அவர்கள் பார்க்குமாறு அவர்களுடைய ஆடையை அவர்களை விட்டும் களைந்து சுவனபதியை விட்டு வெளியேற்றியது போல் அவன் உங்களை (ஏமாற்றிச்) சோதனைக்குள்ளாக்க வேண்டாம், நிச்சயமாக அவனும் அவன் கூட்டத்தாரும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் – நீங்கள் அவர்களைப் பார்க்க முடியாதவாறு, மெய்யாகவே நாம் ஷைத்தான்களை நம்பிக்கை இல்லாதவரின் நண்பர்களாக்கி இருக்கிறோம்.”அல்குர்ஆன் 7:27
ஷைத்தான் அவர்களுடைய (பாவச்) செயல்களை அவர்களுக்கு அழகாகக் காண்பித்து “இன்று மனிதர்களில் உங்களை வெற்றி கொள்வோர் எவருமில்லை, மெய்யாக நான் உங்களுக்கு துணையாக இருக்கின்றேன்!” என்று கூறினான், இரு படைகளும் நேருக்கு நேர் சந்தித்த போது அவன் புறங்காட்டிப் பின்சென்று “மெய்யாக நான் உங்களை விட்டு விலகிக் கொண்டேன், நீங்கள் பார்க்க முடியாததை நான் பார்க்கிறேன், நிச்சயமாக நான் அல்ல்லாஹ்வு; க்குப் பயப்படுகிறேன்,அல்ல்லாஹ் தண்டனை கொடுப்பதில் டினமானவன்” என்றுகூறினான். அல குர்ஆன் 8:48
5. மக்களின் நலம் நாடவேண்டும் கேலி பேசி மனம் புண்படும்படி நடப்பவன் உண்மை இறைவிசுவாசியாக இருக்கமுடியாது:
பின்வரும் நபிமொழிகள் அதை உறுதிப்படுத்துகிறது
“அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் மக்களுக்கும் நன்மையை நாடுவதே மார்க்கம்” என்ற நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி முஸ்லிம்)
அநீதியிழைக்கப்பட்வனின் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும் அவன் பாவியாக இருந்தாலும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முஸன்னஃப் அபீ ஷைபா)
“பிற முஸ்லிம்கள் எவருடைய நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப்பெறுகிறார்களோ அவரே முஸ்லிமாவார். (புகாரி 10)
மேற்கூறப்பட்ட அனைத்து வசனங்களும் நபி மொழிகளும் ஒருவர் மற்றவர்களை ஏமாற்றுவதையும், பொய் பேசுவதையும், மோசடி செய்வதையும், பரிகாசம், கேலி, கிண்டல் செய்வதையும் கடுமையாகக் கண்டிக்கின்றவையாக இருக்கின்றன. மேலும் ஏப்ரல் ஒன்றை மையமாக வைத்து நடக்கின்ற ஏமாற்றுச் செயல்கள் அனைத்தும் ஏப்ரல் ஒன்றில் மட்டுமல்ல வாழ் நாள் முழுவதும் தவிர்ந்து கொள்ளப்படவேண்டியவை என்பதையும் அவை அனைத்தும் நமது பகிரங்க விரோதி ஷைத்தானுடைய செயல்கள் எனபதையும் நாம் விளங்கிக் கொள்ளவேண்டும்.
ஒரு முஸ்லிம் என்றைக்கும் எப்போதும் மற்றவர்களின் மனது புண்படும் படியாகவோ,அவர்களை ஏமாற்றுபவனாகவோ,பரிகாசம் செய்பவனாகவோ,பொய் பேசுபவனாகவோ இருக்க மாட்டான்.
ஏப்ரல் ஒன்று அன்று நடைபெறுகின்ற ஏமாற்றுக்காரியங்களை முஸ்லிம்கள் தங்களைச் சார்ந்து வாழ்கின்ற மற்ற மாற்றுக் கொள்கை களைச் சார்ந்தவர்களிடத்தில் நல்ல அணுகு முறையோடு எடுத்துச் செல்ல வேண்டும். ஒரு முஸ்லிம் தன் வாழ்நாளில் இறைவனிடத்திலும், சக மனிதர்களிடத்திலும், வியாபாரத்திலும், கொடுக்கல் வாங்கலிலும் மோசடி செய்யாதவனாக, ஏமாற்றாதவனாக, வாய்மையாளனாக, நாணயமானவனாக இருக்க அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்.

Thursday 17 March 2016

[01] இறைமறையில் அறிவியல் அற்புதங்கள்

அன்புள்ள வாசகர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
“இறைமறையில் அறிவியல் அற்புதங்கள்” என்ற தொடரின் மூலம், பல ஆண்டுகள் ஆய்வு செய்து, பல நூறு அறிவியல் அறிஞர்களின் கடுமையான உழைப்பிற்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளை 15 நூற்றாண்டுகளுக்கு முன்பு, அறிவியல் வாடையைக்கூட அறிந்திராத மக்களுக்கு முன்பு மிக எளிமையாக இறைவன் குர்ஆனில் கூறியிருக்கும் அறிவியல் அதிசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முன்வந்திருக்கிறேன்.
இறைவன் கூறியிருக்கும் விதம் அறிவியல் அறியாத மக்களும், அறிவியலின் உச்சானியில் இருக்கும் மக்களும் மிக எளிமையாக புரிந்து கொள்ளும் அமைப்பில் இருப்பது அதன் அதிசயங்களில் பேரதிசயமாகும். எந்த காலத்தில் வாழ்ந்த மக்களும் அவர்கள் புரிந்து கொண்ட அறிவியல் உண்மைகளுக்கு எதிராக குர்ஆனின் வசனங்கள் ஒரு போதும் இருந்ததில்லை, இனிமேலும் அவ்வாறு இருக்கப்போவதுமில்லை.
வெவ்வேறு காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளை அந்தந்த காலத்தில் வாழ்ந்த அறிவியல் அறிஞர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் குர்ஆன் வசனங்கள் அமைந்திருப்பது அதன் தனிச்சிறப்பாகும்.
ஒரு காலத்தில் கண்டு பிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் தவறு என நிரூபணம் செய்யப்படும் போது, குர்ஆன் சொன்ன கருத்து தவறு என்று ஆகாது, மாறாக அவர்கள் திருகுர்ஆனை விளங்கிக் கொண்ட விதம், குர்ஆனின் வசனத்திற்கு அவர்கள் கொடுத்த பொருள்தான் தவறு என்றாகும்.
தற்போது கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மையின் படியே இறைவசனம் பொருள் தருகிறது என்று ஒவ்வொரு காலத்து மக்களையும் நம்ப வைப்பதும், எல்லா காலத்து அறிவியல் அறிஞர்கள் கூறும் கருத்துடன் நூற்றுக்கு நூறு பொருந்தி வருகிறது என்று சொல்ல வைப்பதும் அதன் அழியாத அற்புதங்களில் உள்ளதாகும். இந்த அற்புதம் குர்ஆனுக்கு மட்டுமே சொந்தமானதாகும்.
வேத நூற்களில் அறிவியல் ஆராய்ச்சி செய்ய தூண்டும் ஒரே வேதம் குர்ஆன் மட்டும் தான் என ஆணித்தரமாக என்னால் சொல்லமுடியும். மற்ற வேதங்கள் அவ்வாறு தூண்டவில்லை என்பதைவிட அறிவியல் உண்மைக்கு எதிராக நிற்கிறது, அறிவியல் பேசுபவர்களை குழப்பவாதிகள், மாபெரும் குற்றவாளிகள் என முத்திரை குத்தி மரண தண்டனை விதிக்கப்பட்ட வரலாறுகளைத்தான் நம்மால் படிக்க முடிகிறது.
மற்ற வேதங்கள் இறைவனால் அருளப்பட்ட நிலையிலிருந்து மாறி, பல மாற்றங்களுக்கு உட்படுத்தப் பட்டுவிட்டதால், பல அறிவியல் உண்மைகளுக்கு எதிராக இயற்கையாகவே அவைகள் அமைந்துவிட்டன. மத குருமார்களின் ஆதிக்கம் வலுவாக இருந்த போது, அறிவியல் பேசுவோர்கள் சமூக விரோதிகளாக, இறைக்குற்றம் செய்து விட்டவர்களாக கருதப்பட்டு, சிறையிலடைத்து சித்திரவதை செய்யப்பட்டு வந்தார்கள், தங்களது கருத்துகளிலிருந்து பின் வாங்கியவர்களுக்கு உயிர்பிச்சை அளிக்கப்பட்டது, தான் கண்டுபிடித்த அறிவியல் உண்மையிலிருந்து பின்வாங்கதவர்கள் மரண தண்டனை விதிக்கப்பட்டு கொல்லப் பட்டார்கள். இந்த கொடுமை மதத்தின் பெயரால், வேதத்தின் பெயரால் அரங்கேற்றம் செய்யப்பட்டது என்பதுதான் அதிலும் கொடுமையாக இருந்தது.
இந்தக் கொடூரம் வேதங்களின் பெயரால், அரங்கேற்றம் செய்யப்பட்டு கொண்டிருந்த காரணத்தால் பல அறிவியல் விஞ்ஞானிகள், “இறைவன் இல்லை”, “வேதம் பிற்போக்கான கருத்துடையது” என்ற முடிவுக்கு வர வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார்கள்.
ஆனால் எந்த வேத நூலுக்கும் இல்லாத ஒரு தனி சிறப்பு இந்த குர்ஆனுக்கு இருப்பதால்தான், மேலும் அறிவியல் உலகைப் படைத்த அல்லாஹ்வால் அருளப்பட்ட வேதமாகவும் இருப்பதால்தான் இன்று அறிவியல் உலகிற்குகூட அதனால் சவால் விட்டு, நிமிர்ந்து நிற்க முடிகிறது. குர்ஆனை போல இலக்கிய சுவையும், கருத்தாழமும், அறிவியல் உண்மைகளை எளிமையாக எடுத்து வைக்கும் அதன் சிறப்பு பொருந்திய ஒரு வசனத்தையாவது இந்த உலக மக்களால் கொண்டு வர முடியுமா? என அது எடுத்து வைக்கும் சவாலை 15 நூற்றாண்டுகளாக யாராலும் எதிர்கொள்ள முடியவில்லையே, இனிமேலும் அதனை எதிர்கொள்ள முடியாது என்பது இரண்டு கருத்துக்கு இடமில்லாத உண்மையாகும்.
வானவியல், புவியியல் என எத்தனை இயல்கள் இருக்கின்றனவோ அத்தனை இயல்களையும் ஆராய்ச்சி செய்து அல்லாஹ்வின் அற்புத ஆற்றலை புரிந்து கொள்ள தூண்டுகிற ஒரே வேதம் குர்ஆன் மட்டுமே.
இந்த தொடரை உங்கள் முன் வைப்பதில் பெருமிதம் அடைகிறேன். நான் ஒரு மருத்துவன் என்ற முறையில் இன்றைய நவீன மருத்துவ அறிவியல்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு பெற்றுள்ளேன். இந்த அறிவியல் உண்மைகளை 15 நூற்றாண்டுகளுக்கு முன்பே குர்ஆன் மூலம் இந்த உலகிற்கு மிக எளிமையான முறையில் உணர்த்தப்பட்டு விட்டது என்பதை விளக்குவதே எனது நோக்கம்.
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலம், ஒவ்வொரு துறை குறித்தும் தெளிவான, தீர்க்கமான தகவல்களை தந்து கொண்டிருக்கும் அறிவியல் நுட்பம் நிறைந்த காலம். மதத்தின் பெயரால் மூட நம்பிக்கைகளை வளர்ப்பது கடினம், எந்த தகவலையும் அறிவியல் தகவலோடு ஒப்பீடு செய்து பார்த்து ஏற்றுக் கொள்ளும் காலம் இது. மருத்துவ துறையில் இன்று புதிதாக கண்டு பிடிக்கப்பட்ட உண்மைகள் குர்ஆனில் எந்தந்த வசனங்களில் இடம் பெற்றுள்ளது என்று வாசகர்களுக்கு இனம் காட்டுவதே எனது முக்கிய நோக்கம். அதன் மூலம் குர்ஆன் இறைவேதம் என்பதை எளிதாக புரிந்து கொள்ள மிக வசதியாக இருக்கும்.
அல்லாஹ் எனது நல்ல நோக்கத்திற்கு வெற்றியை தருவானாக. எனக்கு இப்படி ஒரு சேவை செய்வதற்கு வாய்பளித்த இறைவனுக்கு நன்றி கூறி, எனது இந்த சேவையினை அங்கீகரித்து கொள்ள பிரார்த்தனையும் செய்து கொள்கிறேன்.
கருயியல்
கருயியல் என்பது மனிதன் கருவுற்று அவன் எவ்வாறு தாயின் வயிற்றில் வளர்ச்சி அடைந்து, முழு மனித வடிவம் பெற்று பிறக்கிறான் என்ற தகவலை ஆய்வு செய்யும் ஒரு துறையாகும். ஒரு பெண் கருவுற்ற நாள் முதல், அவளது வயிற்றில் குழந்தை எந்தந்த நிலையில் எவ்வாறு வளர்ச்சி அடைகிறது என்பது பற்றிய அறிவு சிறிய அளவுகூட இல்லாத காலகட்டத்தில் குர்ஆனில் மிக தெளிவாக, அதே நேரத்தில் மிக எளிமையாக கருவளர்ச்சியின் எல்லா விவரங்களையும் கூறப்பட்டிருப்பது அறிவியல் அறிஞர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.
இறைபணிக்காக இணைந்து நிற்கும் எனதருமை இஸ்லாமிய சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
பதினான்கு நூண்றாண்டுகளுக்கு முன் எல்லாம் வல்ல இறைவனால் நமது நபிக்கு ஜிப்பரயீல்(அலை) மூலமாக அருளப்பட்ட இத்தன்னிகரற்ற மாமறையில் தெரிவித்துள்ள வாழ்க்கை நெறிகளும், அறிவியல் உண்மைகளும் இறைச்சட்டங்களும் இனி எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் காலத்துக்கேற்ப பொருந்தி நிறைந்து நிற்பவை என்பது சத்தியம்.
இவ்வரிய திருமறை வருடம் ஒரு முறையும், நமது நபி(ஸல்) அவர்களின் இறுதியாண்டு வாழ்க்கையில் இரு முறையும் ஜிப்பரயீல்(அலை) அவர்களின் மூலம் சரிபார்க்கப்பட்டும், ஆயிரமாயிரம் சத்திய சஹாபாக்களால் மனனம் செய்யப்பட்டும், பிரதிகள் எடுக்கப்பட்டும் இன்றுவரை ஒரு எழுத்துக்கூட மாற்றம் செய்யப்படாமல் இறையருளால் பாதுகாக்கப்பட்டு, இத்திருமறை “இறைவசனமே” என உலகிற்கு தெளிவாக்கி கொண்டிருக்கிறது.
அறிஞர்களும், விஞ்ஞானிகளும், பல்துறை வல்லுனர்களும் நம் திருமறையில் புதைந்துகிடக்கும், காலத்துக்கேற்ப பொருந்தி நிற்கும், உண்மைகளை கண்டு வியந்து நிற்கின்ற வேளையில், ஒரு சில அறிவிலிகள், 1400 ஆண்டுகள் பழமைவாய்ந்த, ஒரு படிப்பறிவில்லாத நபரின் வாக்குகள் இந்த நூற்றாண்டுக்கு ஏற்றதல்ல என வீராப்பு பேசி எதிர்த்து சேறு பூச விழைகின்றனர்.
அன்பு சகோதரர்களே!, இவ்வெதிர்ப்புக்கள் நமக்கு புதிதல்ல. இஸ்லாம் என்கின்ற வாழ்க்கைநெறி இப்பூலோகத்தில் வேரூன்றி உயர்ந்து நிற்க அது கொடுத்த விலையான தியாகங்களும், உயிர்களும் உலகில் தோன்றிய எந்த ஒரு மதத்திற்கும் ஏற்பட்டதல்ல. இந்த உலகம், நமக்கு உரியதான அடுத்த நிரந்தர உலகத்திற்கு நம்மை தயார்படுத்திக் கொள்ளும் ஒரு பயிற்சி களமே, (நபி மொழி) என்ற சிந்தனையுடன் இச்சத்திய நெறிகளை வேரூன்ற தம் இன்னுயிரையும், உடமைகளையும் நீத்த ஆயிரமாயிரம் நபித்தோழர்களையும், இஸ்லாமிய உடன் பிறப்புகளையும் மனதில் நினைத்து இறைவனிடம் அவர்கள் நிரந்தர வாழ்க்கைக்கு இறைஞ்சி நமது இறைப்பணியை இனிதே தொடர்வோம்.
இச்சிறிய முன்னுரையோடு, இதழ்கள்தோறும் இறைமறையில் புதைந்து கிடக்கும் அறிவியல் உண்மைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஆலோசனைகளும் கருத்துகளும் கேள்விகளும் வரவேற்கப்படுகின்றன.
இந்த வரிசையில், மனிதன் எவ்வாறு உருவாக்கப்படுகிறான் என்பதை, இறைமறை விளக்குவதை பார்ப்போம்.
நிச்சயமாக (முதல்) மனிதனைக் களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர் (அதற்கென உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாமே அவனை இந்திரியத்துளியாக ஆக்கினோம். பின்னர் அதை அலக் என்ற நிலைக்கு மாற்றினோம். பின்னர் ‘அலக்’ என்பதை சதைத்துண்டாக ஆக்கினோம். சதைதுண்டை எலும்பாக ஆக்கி, எலும்புக்கு மாமிசத்தை அணிவித்தோம். பின்னர் வேறு படைப்பாக (முழு மனிதனாக) உருவாக்கினோம். ஆகவே படைப்பாளர்களில் அழகானவனான அல்லாஹ் உயர்ந்தவனாக ஆகிவிட்டான். அல் குர்ஆன் 23:12-14
சகோதரர்களே! மனித கருவளர்ச்சியியலை இவ்வளவு துல்லியமாக வெவ்வேறு நிலைகளில் அதன் உருமாற்றம், கால அளவு, குணாதிசயங்களை படைப்பாளனால் மட்டுமே தெளிவாக்க இயலும்.
நான் கருவளர்ச்சியியலில் ஆழமாக செல்லாமல் இவ்வசனத்தின் சிறப்பை மட்டும் தெளிவாக்குகிறேன். “அந்த இந்திரியத்துளியை கர்பப்பையில் ஒரு பாதுகாப்பான நிலையில் வைத்தோம்” அதாவது, கர்பப்பையின் அமைப்பு, அதன் தசைத்தன்மை, சிறப்பு இரத்த ஓட்ட அமைப்பு அதன் திசுவுடைய குணங்கள் எல்லாம் அதற்கே (குழந்தை வளர்ச்சிக்கே) உரித்தானவை. இச்சிறப்பு அமைப்பு இது போன்ற வேறு எந்த உறுப்புகளுக்கும் இல்லை. செயற்கை முறையில் கருத்தரித்தல் செய்தாலும் அதை (கருவை) பின்னர் இக் கருப்பையில்தான் வைத்து வளர்க்க முடியும். மேலும் “பாதுகாப்பான நிலையில்” வைத்தோம் என்கிறான். அதாவது இக்கருவை கர்ப்பபையின் “உடம்பு” என்ற பகுதி அல்லாது வேறு எந்த பகுதியில் வைத்தாலும் (கருவை) கரு முழு வளர்ச்சி அடைவதில்லை. (Abort) அபார்ட் ஆகிவிடும். எனவேதான் இறைவன் “பாதுகாப்பான இடத்தில்” (உடம்பு பகுதியில்) வைத்ததாக கூறுகிறான்.
இந்த வசனங்களை உன்னிப்பாக கவனிக்கும் போது இறைவன் கர்ப்பப்பையை பொதுவாக குறிப்பிடும் போது “ரஹ்ம்” என்று தான் இறைமறையில் பல இடங்களில் குறிப்பிடுகிறான்.
அடுத்து விந்து துளியை “அலக்” என்ற நிலைக்கு மாற்றினோம் என்று வருகிறது.
“அலக்” என்ற அரபி வார்த்தைக்கு
1. அட்டை,
2. தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு பொருள்,
3. இரத்தக்கட்டி என்ற பொருள்கள் உண்டு.
அட்டையையும், “கரு”வையும் ஒப்பிட்டு பார்க்கும் போது சில ஒற்றுமைகள் உண்டு.
1. இந்த இரண்டின் ஒருமித்த தோற்றம்.
2. அட்டை மற்றவர்களின் இரத்ததைத் உணவாகக் கொள்கிறது. கருவும் தாயின் இரத்ததைத்தான் உணவாக்குகிறது.
அடுத்து தொங்கிக்கொண்டிருக்கும் பொருள் என்பது தாயின் கர்ப்பப்பையில் ஒட்டிக் கொண்டிருக்கம் குழந்தை கருக்கு மிக்க பொருத்தமான பொருள்தானே!.
இரத்தக்கட்டி என்ற பொருளும் மிகச்சரியானதே. எவ்வாறு எனில் “கரு” உருவான முதல் மூன்று வாரங்களும் இரத்தக்கட்டி போன்றுதான் இருக்கும். (இரத்த ஓட்டம் இருக்காது. சுப்ஹானல்லாஹ்! இறைவன் அந்த “அலக்” என்ற வார்த்தையில் கருவின் இயல்புகள், குணங்கள், வளர்ச்சிநிலை போன்றவற்றை வியக்கும் படி தெரிவித்துள்ளான்.